உலக உடல் பருமன் கூட்டமைப்பின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஐந்து முதல் 19 வயது வரையிலான சுமார் 2.85 மில்லியன் மலேசிய பிள்ளைகள் உடல் பருமனானவர்களக கருதப்பட்டனர். உலக உடல் பருமன் அட்லஸ் 2026, ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான 866,000 குழந்தைகள் உடல் பருமனாகவும், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட 1.9 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனாகவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
2040 ஆம் ஆண்டுக்குள் அதிக எடை அல்லது பருமனான பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 3.1 மில்லியனைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2040 ஆம் ஆண்டுக்குள் சுமார் 305,000 குழந்தைகள் உயர் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் காண்பிப்பார்கள் என்றும், 382,000 பேர் உடல் பருமனால் ஏற்படும் இருதய நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய போக்கு தொடர்ந்தால், உலகளவில், 2040 ஆம் ஆண்டுக்குள் 507 மில்லியன் குழந்தைகள் அதிக எடை அல்லது பருமனாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இப்போதிலிருந்து 2040 வரை பருமனான குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும், அந்த ஆண்டுக்குள் ஐந்து முதல் 19 வயதுக்குட்பட்ட 40 மில்லியன் குழந்தைகள் இந்த நிலையை அடையும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த பிராந்தியத்தில் அதிக உடல் நிறை குறியீட்டுடன் வாழும் ஐந்து முதல் 19 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 2040 ஆம் ஆண்டுக்குள் 101 மில்லியனை எட்டும் என்று அது ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பொதுவாக அதிக வருமானம் கொண்ட நாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உடல் பருமன் வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறியது.
சர்க்கரை பானங்கள் மீதான அதிக வரிகள், குழந்தைகளுக்கு அத்தகைய பொருட்களை சந்தைப்படுத்துவதில் கட்டுப்பாடுகள் மற்றும் ஆரோக்கியமான பள்ளி உணவுத் தரநிலைகள் உள்ளிட்ட இந்தப் போக்கை மாற்றியமைக்க வலுவான கொள்கைகள் தேவை என்று கூட்டமைப்பு கூறியது. அதிக எடை மற்றும் பருமனான குழந்தைகளுக்கான தடுப்பு மற்றும் மேலாண்மை முயற்சிகளை அரசாங்கங்கள் அவசரமாக முடுக்கிவிட வேண்டும், மேலும் அவர்களுக்குத் தேவையான பராமரிப்பைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதன் தலைமை நிர்வாகி ஜோஹன்னா ரால்ஸ்டன் கூறினார்.





















