எரிவாயு தட்டுப்பாடு: பெட்ரோலியத்துறை மந்திரியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி,ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வது தடைப்பட்டுள்ளது.

இதன்பாதிப்பு உலகம் முழுவதும் தென்பட தொடங்கி உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பெட்ரோல் விலையும் கூடியுள்ளது. அதேபோல வங்காள தேசத்திலும் பெட்ரோல் – டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் ஓட்டல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு, புதுச்சேரியில் உள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர், வணிக சிலிண்டர் வினியோகத்தை தடை செய்யக்கூடாது என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி, மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் பூரி உடன் ஆலோசனை மேற்கொண்டார். உள்நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இருப்பு குறித்து மத்திய மந்திரியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என பிரதமர் மோடி ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இறக்குமதி பாதிக்கப்படாமல் இருக்க, மாற்று வழிகள், பிற நாடுகளிடமிருந்து எரிபொருளை பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here