மேற்காசிய போர்: வெளிநாட்டு கப்பல்களில் பணிபுரிந்த 3 இந்தியர்கள் இதுவரை பலி; ஒருவர் மாயம்

புதுடெல்லி ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

தொடர்ந்து, ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால், கப்பல்களில் பணியாற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஈரானை ஒட்டியுள்ள பெர்சியன் வளைகுடா பகுதியில் நடந்த தாக்குதல்களில், வெளிநாட்டு கொடியுடன் கூடிய கப்பல்களில் பணிபுரிந்து வந்த 3 இந்தியர்கள் இதுவரை பலியாகி உள்ளனர். ஒருவரை காணவில்லை என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் கடல்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இந்த கப்பல்களில் பணிபுரிந்த 78 இந்தியர்களில் 70 பேர் காயமின்றி தப்பியுள்ளனர். 4 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. எனினும், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், அவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற பின்னர் குணமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here