கிள்ளான் விபத்தில் உயிரிழந்தவரின் மனைவியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய போக்குவரத்து அமைச்சர்

அந்தோணி லோக்

கிள்ளானில் மது மற்றும் போதைப்பொருள் போதையில் இருந்ததாக நம்பப்படும் ஓட்டுநரால் மோதப்பட்டு உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் மனைவியை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சந்தித்தார். நேற்று, மறைந்த 33 வயதான அமிருல் ஹபீஸ் ஓமரின் குடும்பத்தினரைச் சந்தித்ததாகவும், அவருடன் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ராம்லியும் சென்றிருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், குடும்பத்தின் சுமையைக் குறைக்க உதவும் வகையில், உயிரிழந்தவரின் விதவையான 32 வயதான நார் நாடியா அப்துல் மஜித்திற்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவி வழங்கியதாகவும் லோக் கூறினார். இருப்பினும், அன்புக்குரிய ஒருவரை இழந்த துயரத்தை எந்தப் பணமும் ஈடு செய்ய முடியாது. குறிப்பாகத் தன் கணவர் துணையின்றித் தன் வாழ்க்கையைத் தொடர வேண்டிய ஒரு மனைவிக்கு இது மிகவும் கடினம். உணரப்படும் துயரத்தை நான் ஆழமாகப் புரிந்துகொள்கிறேன், மேலும் இந்தக் கடினமான நேரத்தை எதிர்கொள்ளும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் நேற்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

மார்ச் 29 அன்று காலை சுமார் 11.47 மணியளவில் நடந்த ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வக உதவியாளர் ஆர். சக்திகணபதி (28), நேற்று கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து எந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

மற்றொரு குற்றச்சாட்டில், போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்தை குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டார். மேலும் வழக்கு விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை தயாரிப்பதற்காக ஜூன் 3ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. தென் கிள்லான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி லிம் ஜித் ஹுவே, பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்ததாக முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here