சுபாங் ஜெயா | ஏப்ரல் 10, 2026
சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிலிருந்து, அழுகிய நிலையில் 41 பூனைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் கண்டெடுக்கப்பட்ட 41 பூனைகளில், 31 பூனைகளின் உடல்கள் பிளாஸ்டிக் கவர்களால் சுற்றப்பட்டு உறைவிப்பானில் (Freezer) வைக்கப்பட்டிருந்தன. மற்ற 10 பூனைகளின் உடல்கள் வரவேற்பு அறையிலும் கூண்டுகளிலும் சிதறிக் கிடந்தன.
இந்தப் பூனைகள் அனைத்தும் உணவின்றி பட்டினியால் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதே வீட்டில் மேலும் 36 பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழக்கும் தருவாயில் மீட்கப்பட்டன. அவை அனைத்தும் மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாகக் காணப்பட்டன.




















