ஐதராபாத்,பிரபல பாடகி மங்கிலி மீது ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் ரூ.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக மங்கிலி, அவரது சகோதரர் சிவகுமார் மற்றும் திரைப்பட இயக்குநர் வேணு உடுகுலா உள்ளிட்டோர் மீது வழக்கறிஞர் சுப்பாராவ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தக தொழில்களில் அதிக லாபம் தருவதாகக் கூறி சுமார் 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து, லாபத்தையோ அல்லது முதலீட்டுத் தொகையையோ திருப்பித் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
முதலீடு செய்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, மங்கிலி மற்றும் அவரது தரப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த வழக்கறிஞர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





















