அனுஷ்காவிற்காக பிரபாஸ் குடும்பத்திடம் பேசிய ராஜமவுலி

நடிகை அனுஷ்காவையும் நடிகர் பிரபாசையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று முயன்று வருகிறார் ‘பாகுபலி’ இயக்குநர் ராஜமவுலி.

இதற்காக, பிரபாஸ் குடும்பத்தினரைச் சந்தித்து அனுஷ்காவை மருமகளாக ஏற்றுக்கொள்ளும்படி பேசியிருக்கிறார்.

தெலுங்கில் ‘மிர்ச்சி’ படத்தில் நடித்தபோது பிரபாஸுடன் அனுஷ்காவுக்கு நட்பு மலர்ந்தது. அடுத்தடுத்து ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தபோது இந்த நட்பு காதலாக மாறியது.

இந்நிலையில், இவர்களது காதலை அனுஷ்காவின் குடும்பம் ஏற்றுக்கொண்டது.

ஆனால், இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் சரியாக அமையவில்லை என்ற காரணத்தைக் கூறி அவர்களது திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்ட பிரபாஸ் குடும்பம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, பல்வேறு கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து வந்தார் அனுஷ்கா. தோஷம் நீங்க யாகங்களையும் நடத்தினார். ஒரு சில சிறப்புப் பூஜைகளிலும் ஈடுபட்டார்.

எனினும், பிரபாஸ், அனுஷ்காவின் காதல் வாழ்க்கைக்கு விடிவு ஏற்படவில்லை.

அனுஷ்காவுக்கு இந்த ஆண்டு 44 வயது ஆகிறது. பிரபாசுக்கு 45 வயது ஆக உள்ளது.

இந்நிலையில், பிரபாசின் நல்ல நண்பராகவும் அனுஷ்காவின் நலம் விரும்பியாகவும் இருந்து வரும் ராஜமவுலி, இவர்கள் இருவரது காதலையும் திருமணத்தில் முடித்து வைக்க பிரபாஸ் குடும்பத்தாரிடம் பக்குவமாகப் பேசியுள்ளார்.

வயது ஏறிக்கொண்டே போகிறது. இனியும் காலம்தாழ்த்தாமல் ஒரு நல்ல முடிவை எடுத்தால் விரைவில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்துவிடலாம் என்று சொன்னாராம்.

ஆனால், இந்த விஷயத்தில் பிரபாஸ் குடும்பத்தினர் பிடி கொடுத்துப் பேசாமல் இருப்பதாக ராஜமவுலிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here