பேங்க் ராக்யாட் தனது 2025ஆம் நிதியாண்டிற்கான (டிசம்பர் 31 வரை) இலாப ஈவு விகிதத்தை 18 விழுக்காடாக அறிவித்துள்ளது.கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட 17 விழுக்காட்டை விட இது அதிகமாக இருப்பதுடன், கடந்த 10 ஆண்டுகளில் பதிவான உயர்ந்த அளவாகும்.மொத்தமாக 534.7 மில்லியன் ரிங்கிட் தொகை இலாப ஈவு வழங்கப்படவுள்ளது. இத்தொகை 2026 ஏப்ரல் 16 முதல் உறுப்பினர்களுக்கு வழங்கத் தொடங்கப்பட்டுள்ளது என தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.
இதன் மூலம் 783,324 உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள் என்றும் வங்கியின் வலுவான செயல்திறன் காரணமாக அதிக இலாப ஈவு வழங்க முடிந்ததாகவும் நேற்று இங்குள்ள பேங்க் ராக்யாட் இரட்டை கோபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கினார். மேலும், 2025ஆம் ஆண்டிற்கான லாபத்தில் இருந்து 57 மில்லியன் ரிங்கிட் தொகை கூட்டுறவு கல்வி, மேம்பாட்டு நிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 54.7 மில்லியன் ரிங்கிட்டை விட அதிகமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பேங்க் ராக்யாட் தலைவர் டத்தோ முகமட் இர்வான் முகமட் முபாராக், 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், பேங்க் ராக்யாட் 1.9 பில்லியன் ரிங்கிட் லாபத்தைப் (வரி, ஸாகாட்டிற்கு முன்) பதிவு செய்துள்ளது என தெரிவித்தார். இது முந்தைய ஆண்டை விட 4.2 விழுக்காடு அதிகமாகும்.
அதேவேளை, வங்கியின் மொத்த சொத்துகள் 6.6 விழுக்காடு அதிகரித்து 131 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளன. மொத்த வருவாய் 6.8 பில்லியன் ரிங்கிட்டாகவும், கடன் வசதிகள் 93.3 பில்லியன் ரிங்கிட்டாகவும் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் சேவைகள் விரிவாக்கம், வாடிக்கையாளர்களுக்கான புதிய நிதி திட்டங்கள், செலவு கட்டுப்பாடு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராமேஸ்வரி ராஜா
சண்முகம்









