பினாங்கில் போலி அழைப்பு மையங்கள் முடக்கம்: 9 வெளிநாட்டவர்கள் உட்பட 11 பேர் அதிரடி கைது!

ஜார்ஜ் டவுன்:

பினாங்கு, சுங்கை நிபோங் பகுதியில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் (Condominiums) ரகசியமாக இயங்கி வந்த போலி அழைப்பு மையங்களை அதிரடியாகச் சோதனையிட்ட காவல்துறையினர், 9 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 11 பேரைக் கைது செய்துள்ளனர்.

பினாங்கு மாநில வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய இந்தச் சோதனையில், 21 முதல் 56 வயதுக்குட்பட்ட சீனர்கள்: 3 ஆண்கள், தைவானியர்கள்: 2 ஆண்கள், வியட்நாமியர்கள்: 2 ஆண்கள் மற்றும் 1 பெண், ஜப்பானியர்: 1 ஆண் மற்றும் மலேசியர்கள்: 2 ஆண்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று, பினாங்கு போலிஸ் தலைமை ஆணையர் டத்தோ அசிஸி இஸ்மாயில் கூறினார்.

இந்தச் கும்பல் போலி முகநூல் (Facebook) கணக்குகளை உருவாக்கி சீனா, ஜப்பான், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தச் சர்வதேச மோசடி கும்பலில் வாடிக்கையாளர் சேவை முகவர்களாக (Customer Service Agents) பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இந்த மாத தொடக்கத்திலிருந்து சுங்கை நிபோங் பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சோதனையின் போது 11 ஐபோன்கள் (Apple iPhones), மடிக்கணினிகள், கணினித் திரைகள் (Monitors), சிபியு (CPUs), வைஃபை ரௌட்டர்கள் மற்றும் மோசடிக்குத் தேவையான பல்வேறு மின்னணு சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட அனைவரும் தற்போது மேலதிக விசாரணைக்காகப் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஏமாற்றுதல் தொடர்பான தண்டனைச் சட்டப்பிரிவு 420-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here