செராஸ் பொழுதுபோக்கு மையத் தாக்குதல்: 33 பேருக்குக் கூடுதலாக 10 மாதச் சிறை – உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

கோலாலம்பூர்:

செராஸ், தாமன் ஷாமெலினில் (Taman Shamelin) உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய 33 ஆடவர்களுக்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று கூடுதலாக 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 7:30 மணியளவில், ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பொழுதுபோக்கு வளாகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா 2,000 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட் வரை அபராதம் மட்டும் விதித்திருந்தது.

மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, தண்டனையைத் தரம் உயர்த்தக் கோரி அரசுத் தரப்பு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரித்த நீதிபதி அஸ்லாம் ஜைனுதீன் இன்று புதிய தீர்ப்பை வழங்கினார்:

ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத்துடன் சேர்த்து, 33 பேருக்கும் கூடுதலாக 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்தச் சிறைத்தண்டனை இன்று (ஏப்ரல் 21) முதல் தொடங்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுவரை அபராதத்தைச் செலுத்தாமலும், இன்றைய விசாரணையில் முன்னிலையாகத் தவறியும் உள்ள ஏ. கணேசன் என்ற நபருக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை (Warrant) பிறப்பித்துள்ளது.

“குற்றவாளிகள் ஒரு பெரிய குழுவாகத் திரண்டு ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இக்குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொள்ளும்போது அபராதம் மட்டும் விதிப்பது போதுமானதல்ல,” என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் முகமது நோர்டின் இஸ்மாயில் வாதிட்டார்.

தாக்குதலின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சொத்துகள் மட்டுமே சேதமடைந்தன என்றும், அவர்கள் தங்கள் குற்றத்தை முதல் கட்டத்திலேயே ஒப்புக்கொண்டனர் என்றும் பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் டேமியன் சான் வாதிட்டார்.

இருப்பினும், பொது நலன் மற்றும் குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு நீதிபதி இந்தச் சிறைத்தண்டனையை உறுதி செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here