கோலாலம்பூர்:
அரசாங்க ஒப்பந்தம் தொடர்பான அதிகார துஷ்பிரயோகப் புகார்கள் குறித்து, முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ராம்லி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (MACC) நான்கு நாட்களாக அளித்து வந்த வாக்குமூலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்தில் சுமார் 131 பக்கங்களைக் கொண்ட விரிவான வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விசாரணை முடிவெடுக்கும் முறைகள் மற்றும் நடைமுறைகளை மட்டுமே மையமாகக் கொண்டிருந்ததாகவும், பணப் பரிமாற்றம் தொடர்பான அம்சங்கள் ஏதும் இதில் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
பிரிட்டனைச் சேர்ந்த ஆர்ம் ஹோல்டிங்ஸ் (Arm Holdings) நிறுவனத்துடனான செமிகண்டக்டர் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள இப்புகார் குறித்து ஏற்கனவே 22 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ள வேளையில், 2009-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 23-ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.




















