சோழர் கால தாமிர செப்பேடுகள்.. ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சியான தருணம் – பிரதமர் மோடி

தி ஹேக், ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து நாட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடைய வருகையை சிறப்பிக்கும் வகையில், இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை போற்றும் வகையில் இளம் கலைஞர்கள் சார்பில் நடனம், இசை கச்சேரி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது, பிரசித்தி பெற்ற ஆனைமங்களம் தாமிர தகடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இவை லைடன் தகடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த அரசாட்சிகளில் ஒன்றான, 11-ம் நூற்றாண்டு சோழ அரசாட்சி காலத்திலான இந்த கலை பொருட்கள் லைடன் பல்கலைக்கழகத்தில் கடந்த 300 ஆண்டுகளாக வைக்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, 2023-ல் யுனெஸ்கோ அமைப்பின் தலையீட்டால் இந்த செப்பேடுகள் திருப்பி தரப்பட்டு உள்ளன. இந்த செப்பேடுகள் சோழர்களுடைய பெருமையை குறிப்பிடுவதுடன், புத்த மதத்திற்கு அவர்கள் அளித்த ஆதரவையும் பறைசாற்றும் வகையிலான முக்கிய ஆவணங்களாகும்.

30 கிலோ எடை கொண்ட, 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையம் கொண்டு பிணைக்கப்பட்டு உள்ளன. அதில், முதலாம் ராஜேந்திர சோழரின் முத்திரை உள்ளது. இந்த பதிவுகளின்படி 985 முதல் 1,014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவருடைய மகனான ராஜேந்திர சோழன் ஆகியோரின் காலத்தில், இவை உருவாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

டச்சு நாட்டின் கிழக்கு இந்திய நிறுவனம் நாகையில் 17-ம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்தியபோது, டச்சு மிஷனரியான புளோரென்சியஸ் கேம்பர் என்பவர் அவற்றை கைப்பற்றி, நெதர்லாந்துக்கு கொண்டு சென்றார். இறுதியில் அவை லைடன் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டன. அவற்றை பற்றி பலர் ஆராய்ச்சி செய்து வந்தனர். எனினும், பொதுமக்கள் அவற்றை அணுக முடியாத வகையிலேயே இருந்தன. இவை இந்தியாவுக்கு திருப்பி தரப்பட்டு உள்ளன. இந்தியாவின் கலாசார பாரம்பரிய மீட்பு முயற்சிகளில் கிடைத்த முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சோழர் கால தாமிர செப்பேடுகள் இந்தியாவுக்கு வர உள்ளது, ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சியான தருணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு இந்தியருக்கும் இது ஒரு மகிழ்ச்சியான தருணம். 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் செப்புத் தகடுகள், நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளன. பிரதமர் ராப் ஜெட்டன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் நான் கலந்துகொண்டேன். சோழர் செப்புத் தகடுகள் என்பவை 21 பெரிய தகடுகள் மற்றும் 3 சிறிய தகடுகள் அடங்கிய ஒரு தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலும், உலகின் மிக அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் உள்ள வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இவை, மாபெரும் ராஜேந்திர சோழன் முதலாம், தனது தந்தை முதலாம் ராஜராஜ மன்னர் அளித்த வாய்மொழி வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியாவில் உள்ள நாம் சோழர்கள், அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் கடற்படைத் திறமை ஆகியவற்றைக் குறித்து மிகுந்த பெருமை கொள்கிறோம். 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இந்தச் செப்புத் தகடுகள் வைக்கப்பட்டிருந்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும், குறிப்பாக லைடன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here