பகாங் மாநிலத்தின் சுற்றுலாத் துறை தொடர்ந்து சர்வதேச அளவில் போட்டித்தன்மையுடன் திகழ்வதை உறுதி செய்ய, முறையான, நியாயமான நிலையான சுற்றுலா மேலாண்மை மூலம் மாநிலத்தின் சுற்றுலா மேம்பாடு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மலேசிய பட்ஜெட் மற்றும் வணிக ஹோட்டல் சங்கம் (மைபா ) கோரிக்கை விடுத்துள்ளது. தெமர்லோ அப்சரா ஹோட்டலில் (மே.23) நடைபெற்ற பகாங் மாநில மைபா சங்கத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து பகாங் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ கே. விஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுற்றுலா மேம்பாடு என்பது வெறும் விளம்பரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என்றும், மாறாக வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் ஒட்டுமொத்த அனுபவத்தின் தரம் மற்றும் சுற்றுலாத் தலங்களின் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து ஒட்டுமொத்தமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உள்ளூர்வாசிகள் தங்களைச் சுற்றியுள்ள பின்தங்கிய நிலைகளை எளிதில் பழகி ஏற்றுக்கொண்டு விடுகின்றனர்; ஆனால் வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமே அங்கு மேம்படுத்தப்பட வேண்டிய உண்மையான குறைகளைக் கண்டறிய முடியும் என்பதால், பயணிகளின் கருத்துகளுக்கு நிர்வாகம் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான குவாந்தான் செராத்திங் மற்றும் தியோமான் தீவு ஆகியவை சர்வதேச சுற்றுலா ஈர்ப்புத் தலங்களாக மாறும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளதால், இவற்றின் மீது அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என டத்தோ ஸ்ரீ விஜயேந்திரன் கேட்டுக்கொண்டார். செராத்திங் பகுதிக்கு புதிய விளம்பர உத்திகள், மறுபெயரிடுதல் மற்றும் சுற்றுலா தயாரிப்புகளின் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் புதிய புத்துயிர் ஊட்டப்பட வேண்டும் என்றும், தியோமான் தீவு இன்னும் எதிர்கொண்டு வரும் படகுப் போக்குவரத்து , பயணக் செலவுகள், தூய்மை மற்றும் முறையான பராமரிப்பு உள்ளிட்ட சவால்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், முறையாகக் கட்டுப்படுத்தப்படாத குறுகிய கால தங்கும் விடுதிகள் , மற்றும் உரிமம் இல்லாத சட்டவிரோத தங்கும் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர், இத்தகைய அங்கீகரிக்கப்படாத தங்கும் விடுதிகள் சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதோடு, குறிப்பிட்ட இடத்தின் நற்பெயரையும், ஒட்டுமொத்த ஹோட்டல் தொழில்துறையையும் கடுமையாகப் பாதிக்கும் என்று எச்சரித்தார். கடைசி நிமிடத்தில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி அல்லது சுற்றுலா ரத்து செய்யப்படும்போது, அது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மட்டுமின்றி, ஹோட்டல் முன்பதிவுகள், உள்ளூர் வணிகங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினரையும் தொடராகப் பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, பகாங் மாநில அரசு தொடர்ந்து முதலீடுகளை ஊக்குவிப்பதோடு, தொழில்துறைக்கு உகந்த சுற்றுலாச் சூழலை வலுப்படுத்த வேண்டும் என மைபா நம்புகிறது. மாநிலத்தின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்ந்து தொய்வின்றி வளர்ச்சியடைவதை உறுதிசெய்ய, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை அம்சங்கள், தூய்மை, பாதுகாப்பு மற்றும் நிலையான சுற்றுலா ஆகியவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பி.ராமமூர்த்தி










