கோலாலம்பூர்:
மலேசியாவில் மக்கள் வீடமைப்பு திட்டம் (PPR) வீடுகளின் மாறாத வாடகை விகிதம் மற்றும் பல மில்லியன் ரிங்கிட் வாடகை நிலுவைத்தொகை காரணமாக, பொது வீடமைப்பு நிர்வாகம் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாக ‘திங்க் சிட்டி’ (Think City) அமைப்பு தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாக மாதாந்திர வாடகை RM124 ரிங்கிட்டாகவே நீடிக்கும் வேளையில், வீடுகளின் பராமரிப்புச் செலவோ முந்நூறு ரிங்கிட் வரை உயர்ந்துள்ளதால், கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL) தனது வாடகை வருவாயைக் காட்டிலும் ஏழு மடங்கு கூடுதல் நிதியை நிர்வாகத்திற்காகச் செலவிட வேண்டியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை வரை திரண்டுள்ள RM60 மில்லியன் ரிங்கிட் வாடகை நிலுவைத்தொகையால் பராமரிப்புப் பணிகள் முடங்கி, அடிப்படை வசதிகள் சீர்குலைந்துள்ளதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, பொது வீடமைப்பு திட்டங்களுக்கான புதிய நிதி மாதிரியை உருவாக்க உயர்மட்டப் பணிக்குழு ஒன்றை அரசாங்கம் உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் திங்க் சிட்டி வலியுறுத்தியுள்ளது.



















