கோலாலம்பூர்:
பினாங்கின் மிக முக்கியப் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான கோலா ஜூரு (Kuala Juru) பகுதியின் 80 ஆண்டுகால சிப்பி (Cockle/Mussel) வளர்ப்புத் தொழில், கடுமையான ஆற்று நீர் மாசுபாடு காரணமாக முற்றிலுமாக அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. டன் கணக்கில் சிப்பிகள் மடிந்து வருவதால், லட்சக்கணக்கான ரிங்கிட் நஷ்டமடைந்து வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களாக இப்பகுதியில் உள்ள சிப்பிகள் அறுவடைக்கு முன்பே ஆற்றுக்குள் மடிந்து கிடப்பதாகக் கோலா ஜூரு பகுதி பி (Unit B) மீனவர் சங்கத் தலைவர் வாஹித் ஒத்மான் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ‘சுங்கை தெர்ஹாகா’ (Sungai Derhaka) என்ற ஆற்றின் கிளைக் கால்வாய், சமீபத்தில் அகலப்படுத்தப்பட்டு மீண்டும் திறந்து விடப்பட்டது. அதன் பின்னரே இந்த விபரீதம் தொடங்கியதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அருகில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகளைத் தாங்கி வரும் இந்த நச்சு நீர், சிப்பி வளர்ப்புப் பகுதிக்கு மிக அருகில் இருக்கும் ‘சுங்கை ஜூரு’ (Sungai Juru) ஆற்றில் கலப்பதால், ஆற்று நீர் முற்றிலும் கறுப்பு நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுவதோடு சிப்பிகளையும் கொன்று குவித்து வருகிறது.
“இதற்கு முன்பு நாங்கள் 10 மூட்டை சிப்பிகளை அறுவடை செய்தால், அனைத்தும் நல்ல தரத்துடன் விற்பனைக்குச் செல்லும். ஆனால் இப்போது, 10 மூட்டைகளில் வெறும் 2 மூட்டை சிப்பிகள் மட்டுமே தேறுகின்றன; மற்றவை அனைத்தும் நச்சு நீரால் மடிந்து வெறும் ஓடுகளாகக் கிடக்கின்றன” என வாஹித் ஒத்மான் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பருவத்திற்கும் (Season) மீனவர்கள் தங்களின் சொந்த சேமிப்பிலிருந்து சுமார் 300,000 முதல் 500,000 ரிங்கிட் வரை சிப்பி விதைபிற்காக முதலீடு செய்கின்றனர். இதற்கு அரசாங்கத்தின் மானியம் எதுவும் கிடையாது.
பொதுவாக 7 முதல் 8 மாதங்களில் விளையும் சிப்பிகள், தற்போது மோசமான நீர் நிலையால் முதிர்ச்சியடைய கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக் கொள்கின்றன. அதிலும் பாதி வழியிலேயே மடிந்து விடுவதால் மீனவர்கள் வாங்கிய கடனைக் கூட திருப்பிக் கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
25 ஆண்டுகால அனுபவமிக்க மூத்த மீனவரான முகமட் ஹில்மி இப்ராஹிம் (வயது 46) கூறுகையில், அதிகாலை வேளையில் ஆற்றில் அதிக அலை (High Tide) ஏற்படும் சமயங்களில், ஆற்று நீர் திடீரென கறுப்பாக மாறி, சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுவதாகக் குறிப்பிட்டார். தொழிற்சாலைகள் தங்களின் ரசாயனக் கழிவுகளைப் பொதுமக்களின் கண்ணில் படாமல் இருக்க, நள்ளிரவிலும் அதிகாலை வேளையிலும் ஆற்றில் திறந்து விடுவதாக மீனவர்கள் பலமாகச் சந்தேகிக்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள 22 ஹெக்டேர் உரிமம் பெற்ற வளர்ப்புப் பகுதியில், தற்போது பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் மோசமான சேறு மற்றும் நச்சுத்தன்மை காரணமாகச் சிப்பி வளர்ப்பிற்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன.
இதுகுறித்து மீனவர்கள் கொடுத்த தொடர் புகார்களை அடுத்து, மீன்வளத்துறை (Fisheries Department) அதிகாரிகள் இரண்டு முறை வந்து நீரின் மாதிரிகளைச் சேகரித்துச் சென்றுள்ளனர். மேலும், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (DID) அதிகாரிகள் ட்ரோன் (Drone) தொழில்நுட்பம் மூலம் ஆற்றுப் பகுதியை ஆய்வு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இது தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்பட்ட மாசு என்பது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது.
மாநில அரசாங்கமும், சுற்றுச்சூழல் அமலாக்க முகமைகளும் உடனடியாக தலையிட்டுத் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், பினாங்கின் மிகப்பழமையான பாரம்பரிய மீன்பிடித் தொழிலும், 150-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் வரலாற்றிலிருந்து மறைந்துவிடும் என மீனவர் சங்கம் எச்சரித்துள்ளது.
-NST-





















