ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான 26 பேர் கொண்ட அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக மெஸ்ஸியே தொடருவார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் 6ஆவது முறையாக மெஸ்ஸி பங்கேற்க உள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேஜர் லீக் கால்பந்து தொடரில், இண்டர் மியாமிஅணி, பிலடெல்பியா அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியின் 73ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி திடீரென தனது இடது தொடையின் பின்பகுதியைப் பிடித்தபடி அசௌகரியத்தை வெளிப்படுத்தினார். பின்னர் மாற்று வீரரை களமிறக்க சொல்லி மைதானத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து, திங்கட்கிழமை அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில், அதிகப்படியான பணிச்சுமை காரணமாக இடது தொடைப் பகுதியில் கடுமையான தசைப்பிடிப்பு, தசை சோர்வு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஜூன் மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில், உலகக் கோப்பை அணியில் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.









