மலாக்கா விபத்து: காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒரு மாதக் குழந்தை – தலையில் காயம்!

மலாக்கா:

லாக்கா, பாலாய் பாஞ்சாங்கில் உள்ள லெபு AMJ (Lebuh AMJ) நெடுஞ்சாலையில், எரிபொருள் நிலையத்திற்கு அருகே நேற்றிரவு நிகழ்ந்த இரு வாகன மோதலில், ஒரு மாதக் கைக்குழந்தை காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு தலையில் காயமடைந்தது.

மலாக்கா தெங்கா மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் ஹலிம் அபாஸ் இதுகுறித்துக் கூறுகையில், நேற்றிரவு சுமார் 10.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ஆண் குழந்தையும் அவனது பெற்றோரும் பயணித்த ‘புரோட்டோன் சாகா’ (Proton Saga) கார், எரிபொருள் நிலையத்திலிருந்து வெளியேறி லெபு AMJ சாலைக்குள் நுழைய முயன்றபோது, மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் காரணமாக, காரின் பின் இருக்கையில் தாயின் மடியில் அமர்ந்திருந்த அந்தக் குழந்தை, காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு அருகிலிருந்த புல்வெளியில் விழுந்துள்ளது. இதனால் குழந்தையின் தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் தாயாருக்கு முதுகு வலி ஏற்பட்ட வேளையில், தந்தை எவ்விதக் காயமுமின்றி தப்பினார்.

பாதிக்கப்பட்ட தாயும் குழந்தையும் உடனடியாக மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை சீராக இருப்பதை உறுதி செய்த பின்னர், அவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக ஹலிம் அபாஸ் இன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மேல் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 43(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அகமது அத்வா ஜமால் (Ahmad Adhwa Jamal) என்பவரை 011-26905852 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here