சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், பிரபல பாடகி கெனிஷாவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நீதிமன்றம் 5 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் வசித்து வரும் இந்தியப் பெண்ணான ஆன்லெட் மெர்லின் என்பவருக்கு எதிராக, சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறி கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் ஆகியோர் மீது ஷார்ஜாவில் உள்ள அல்புகாரியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த ஷார்ஜா நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் நேரில் ஆஜராகும்படி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் ஆகிய இருவருக்கும் தலா 5 ஆயிரம் திர்ஹாம் இந்திய மதிப்பில் சுமார் 1.30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஷார்ஜா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட நபர் குறித்து கருத்துக்களைப் பதிவிட கெனிஷாவுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடர் விமர்சனங்களால் மனமுடைந்த கெனிஷா, நடிகர் ரவி மோகனுடனான தனது தொழில்முறைத் தொடர்பில் இருந்து விலகுவதாக அண்மையில்தான் அறிவித்திருந்தார்.





















