கோலாலம்பூர்:
ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், ‘பெரிகாத்தான் நேஷனல்’ (PN) கூட்டணியில் இணைவதற்காக ‘ரீசெட்’ (Reset) இயக்கத்திடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ விண்ணப்பமும் வரவில்லை என்று பிஎன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பெர்சத்து (Bersatu) துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தலைமையிலான இந்த ‘ரீசெட்’ இயக்கத்தைப் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து இதுவரை எந்தவொரு முறையான பேச்சுவார்த்தையோ அல்லது முயற்சிகளோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நேற்று இரவு கோத்தா சாரங் செமுட்டில் உள்ள கெடா பாஸ் வளாகத்தில், கெடா மாநில பாஸ் (PAS) கட்சியின் தேர்தல் பிரச்சார இயந்திரத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் அகமட் சம்சூரி:
“ரீசெட் இயக்கம் பிஎன் கூட்டணியில் இணைவது குறித்து அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை, சாதாரண நட்பு ரீதியிலான (Informal) பேச்சுகள் மட்டுமே இடம்பெற்றன. நாங்கள் அம்னோவுடனும் கூட சில விஷயங்களைப் பேசியுள்ளோம். ஏனெனில் ஒவ்வொரு தரப்பிற்கும் தனித்தனி தலைமைத்துவம் உள்ளது. ஆனால் எங்களது சந்திப்புகளின் போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதேபோலத்தான் ரீசெட் இயக்கத்தின் விவகாரத்திலும் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. அவர்கள் எங்களுடன் இணைய விரும்பினால், மற்ற கட்சிகளைப் போலவே முறைப்படி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்; அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.
ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகள் குறித்துப் பேசிய சம்சூரி (இவர் பாஸ் கட்சியின் துணைத் தலைவரும் ஆவார்), வரும் புதன்கிழமை (ஜூன் 17) கட்சியின் உயர்மட்டத் தலைமை ஒரு முக்கியக் கூட்டத்தைக் கூட்டி சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாகக் கூறினார். இக்கூட்டத்தில், புதிய அரசியல் கூட்டணிகளை உருவாக்குவது (Political alignment) சாத்தியமா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.
தற்போதைய நிலவரப்படி எந்தவொரு புதிய கூட்டணியிலும் இணைவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்றும், தேர்தல் நெருங்கும் போது இத்தகைய ஆய்வுகள் சாதாரணமானவை என்றும் அவர் குறிப்பிட்டார். முதலில் பாஸ் கட்சி தங்களுக்குள் பேசிவிட்டு, அதன் பின்னர் பிஎன் கூட்டணியுடன் கலந்தாலோசிக்கும் என்றும் அவர் விவரித்தார்.
ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் பிஎன் (PN) மற்றும் பாஸ் (PAS) ஆகிய பிராண்டுகள் மீது மக்களுக்கு இன்னும் பலத்த ஆதரவும் நம்பிக்கையும் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முந்தைய தேர்தல்களைப் போலன்றி, இந்த முறை இரு மாநிலத் தேர்தல்களும் அடுத்தடுத்து வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பதால், மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும் நிலைமையை ஆராய்ந்து வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளதாகக் கூறினார்.





















