சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய் …

சென்னை, தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் புதுமுகங்கள் என்பதால், சட்டசபை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

முதல்-அமைச்சர் விஜய்

அதன்படி, இன்று (16-ம் தேதி) மற்றும் நாளை (17-ம் தேதி) சென்னை கலைவாணர் அரங்கத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பேரவை நடவடிக்கைகள், செயல்பாடுகள் தொடர்பான பயிலரங்கை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “17-வது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு வரும் 16 மற்றும் 17-ந் தேதிகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள 3-வது தளத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த புத்தாக்க பயிற்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

நேரடி ஒளிபரப்பு

இந்த புத்தாக்க பயிற்சியை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அவை மரபுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.

கவர்னர் அர்லேகர் உரை

17-வது சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் அர்லேகர் உரையுடன் நாளை மறுநாள் (18-ந் தேதி) கூட இருக்கிறது. அதற்கு முன்னதாக, இந்த புத்தாக்க பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here