மலேசியா டிஜிட்டல் 2030 (MD2030) திட்டத்தைப் பிரதமர் தொடங்கினார்; AI தொழில்நுட்ப நாடாக உருவெடுக்க மலேசியா புதிய இலக்கு!

கோலாலம்பூர்:

மலேசியாவை வெறும் தொழில்நுட்பப் பயனாளியாக மட்டுமன்றி, உள்நாட்டுத் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடாக மாற்றும் நோக்கில், ‘மலேசியா டிஜிட்டல் 2030’ (MD2030) என்ற புதிய வியூகத் திட்டத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

2026 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான இத்திட்டத்தை வழிநடத்தும் முதன்மைப் பொறுப்பை டிஜிட்டல் அமைச்சு (Kementerian Digital) ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மடானி’ (MADANI) பொருளாதாரக் கொள்கை மற்றும் 13-வது மலேசியத் திட்டத்தின் (RMK13) இலக்குகளை ஆதரிக்கும் வகையில் இந்த வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

2030-க்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்களிப்பை 30% ஆக உயர்த்துதல், டிஜிட்டல் பொருளாதாரத் துறையில் 500,000 உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், அரசாங்கச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் பொதுத்துறைச் செலவீனங்களில் RM4.5 பில்லியன் சேமிப்பு மற்றும் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சேவைகளில் 95 விழுக்காட்டை ஆன்லைன் (End-to-End) வழி வழங்குதல் போன்ற முக்கிய இலக்குகளை அடைவதற்கு இந்த திட்டம் வழி செய்யும்.

மேலும் அரசாங்கம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, திறமையாளர்கள், சமூகம், நம்பிக்கை-பாதுகாப்பு, மற்றும் கண்டுபிடிப்பு என்பவற்றை உள்ளடக்கி பல்வேறு அமைச்சுகளின் கூட்டுப் பங்களிப்போடு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது .

இதற்காக தேசிய ஏஐ அலுவலகம் (NAIO), மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (MDEC) மற்றும் சைபர் செக்யூரிட்டி மலேசியா (CSM) போன்ற முக்கிய முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன.

இது குறித்துப் பேசிய டிஜிட்டல் அமைச்சர் கோவிந்த் சிங் டியோ, “இந்த மாற்றம் வெறும் எண்களையும் தொழில்நுட்பத்தையும் சார்ந்தது அல்ல; நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பலன்களைச் சமமாகப் பெறுவதை உறுதி செய்வதே எங்களின் இறுதி இலக்கு” என்று உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here