‘பார்ட்டி சிந்தா மலேசியா’ இனி ‘வாவாசான்3 நெகாரா’ – RoS ஒப்புதல்; புதிய கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்கத் தயார்-ஹம்சா ஜைனுடின் அறிவிப்பு!

கோலாலம்பூர்:

‘பார்ட்டி வாவாசான் நெகாரா’ (Parti Wawasan Negara) அரசியல் கட்சி அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் அறிவித்துள்ளார்.

முன்னதாக ‘பார்ட்டி சிந்தா மலேசியா’ (Parti Cinta Malaysia – PCM) என்ற பெயரில் இருந்த இக்கட்சியின் பெயர் மாற்றம், பதிவு செய்யப்பட்ட முகவரி, அரசியலமைப்பு திருத்தங்கள், கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றின் பயன்பாட்டிற்குச் சங்கங்களின் பதிவாளர் (RoS) ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் சிறப்புப் பொதுக்கூட்டத்தைத் (EGM) தொடர்ந்து, இந்த மாற்றங்கள் அனைத்தும் ஜூலை 7-ஆம் தேதியிட்ட அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் RoS-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஹம்சா தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியில் வாக்குகள் சிதறுவதைத் தவிர்ப்பதற்காக வாவாசான் கட்சி போட்டியிடவில்லை. ஆனால், வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் இக்கட்சி தற்போதைய பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் ஓர் அங்கமாகப் போட்டியிடும். இதற்கான தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்று, இன்று நடைபெற்ற கட்சியின் முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here