கோலாலம்பூர்:
ஜோகூர் பாரு, தாமான் இம்பியான் அமாஸ் (Taman Impian Emas) பகுதியில் நபர் ஒருவர் ஒரு கும்பலால் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தப்படுவது போன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வேளையில், அது குறித்து போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த 35 வினாடி வீடியோவில், ஒரு கும்பல் நபர் ஒருவரை சாம்பல் நிற புரோட்டோன் வாஜா (Proton Waja) காரில் வலுக்கட்டாயமாகத் தள்ளி ஏற்றுவது பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் சிலர் அக்கும்பலைக் கேள்வி கேட்ட போதிலும், தங்களின் சொந்தப் பாதுகாப்புக்கு அஞ்சி அவர்கள் காரை நெருங்கவில்லை. எனினும், அந்த நபர் காரில் கடத்திச் செல்லப்பட்டாரா அல்லது அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்பது அந்த வீடியோவில் பதிவாகவில்லை.
திங்கட்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், இது ஒரு கடத்தல் சம்பவமாக இருக்குமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள ஜோகூர் பாரு (வடக்கு) மாவட்ட போலீசார், வழக்கு குறித்த தீவிர புலனாய்வு மற்றும் விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் கூடுதல் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.




















