கோலாலம்பூர்:
மலேசியாவில் தற்போது முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே தற்போதைய முக்கிய நோக்கம் என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் கடமைகளையும் நிறைவேற்ற போதிய அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போதைய ஆளும் அரசாங்கத்தின் பதவிக்காலம் 2028 பிப்ரவரி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடந்து முடிந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில், மொத்தம் உள்ள 56 தொகுதிகளில் அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் (PH) கூட்டணி 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பலத்த பின்னடைவைச் சந்தித்தது. அங்கு தேசிய முன்னணி (BN) 48 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 2025 சாபா மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து, PH கூட்டணிக்கு இது இரண்டாவது பெரும் சரிவாகும்.
கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசல்களால், அக்டோபர் மாதத்திற்குள் பொதுத்தேர்தல் வரலாம் என்ற அரசியல் வதந்திகளுக்கு மத்தியில் பிரதமர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு PH மீண்டும் BN கூட்டணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதற்கிடையே, மலாக்கா மாநில அரசுக்கான ஆதரவை பக்கத்தான் ஹரப்பான் (PH) முழுமையாக மீட்டுக் கொண்டுள்ளது. மலாக்கா சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ‘நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புதிய இடங்களை உருவாக்கும் மசோதாவுக்கு’ PH கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இருப்பினும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, PH கூட்டணியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை மீட்டுக் கொண்டனர். மாநில நிர்வாகப் பதவிகளில் (Exco) இருந்த நால்வர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும் இன்று (ஜூலை 15) முதல் மலாக்காவில் பக்கத்தான் ஹரப்பான் அதிகாரப்பூர்வமாக எதிர்க்கட்சியாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணியுடன் (BN) எவ்விதக் கூட்டணியும் வைக்கப்பட மாட்டாது என்று PH மலாக்கா பிரிவுத் தலைவர் கூ போய் தியோங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.-




















