ஓய்வை அறிவித்த அர்ஜென்டினா கால்பந்து வீரர்

அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நிகோலஸ் ஒட்டமெண்டி தனது 17 ஆண்டுகால அனைத்துலக கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர தற்காப்பு வீரர் நிகோலஸ் ஒட்டமெண்டி. 38 வயதான அவர், அர்ஜெண்டினா தேசிய அணிக்காக மொத்தம் 139 போட்டிகளில் விளையாடி அந்த அணியின் முக்கிய தூணாக விளங்கியுள்ளார்.

2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியில் முக்கிய பங்காற்றிய அவர், இரண்டு முறை கோபா அமெரிக்கா கோப்பையையும் வென்றுள்ளார். மேலும், தனது அனைத்துலக வாழ்க்கையில் 4 உலகக் கோப்பை தொடர்களில் அர்ஜெண்டினாவை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த நாட்டின் சிறந்த தற்காப்பு வீரர்களில் ஒருவராக முத்திரை பதித்துள்ளார்.

இவ்வாறு 17 ஆண்டுகளாக அனைத்துலக கால்பந்து உலகில் பயணித்து வந்த ஒட்டமெண்டி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் இன்று என் கால்பந்து வாழ்க்கையில் மிகவும் கடினமான வார்த்தைகளை எழுத வேண்டிய தருணம் வந்துள்ளது. எனது அனைத்துலக வாழ்க்கையின் கடைசி போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியாக அமைந்தது விதியின் விளையாட்டாகவே பார்க்கிறேன். நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்றாலும் கடைசி விநாடி வரை அணிக்காக முழு அர்ப்பணிப்புடன் போராடினோம் என்ற பெருமையுடன் தலைநிமிர்ந்து வெளியேறுகிறேன்.

உலகச் சாம்பியனாகும் என் கனவை நனவாக்கியதற்காக நன்றி, அர்ஜெண்டினா என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெய்னிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா தோல்வியடைந்தது. அந்தப் போட்டியே ஒட்டமெண்டியின் கடைசி அனைத்துலக போட்டியாக அமைந்திருக்கிறது. ஒட்டமெண்டியின் ஓய்வு அறிவிப்பு, உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here