கோலாலம்பூர்:
மலேசியாவிலிருந்து முதற்கட்டமாக 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்றுக்கொள்வதற்கு மியன்மார் அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இரு நாட்டு அரசுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நீண்டகாலமாக நீடிக்கும் ரோஹிங்கியாப் பிரச்சினையை முடிவிற்குக் கொண்டுவரவும், நாட்டின் பொது அமைதியைப் பேணவும் மேற்கொள்ளப்படும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
“அவர்களை ஏன் உடனே திருப்பி அனுப்பக் கூடாது என மக்கள் கேட்கிறார்கள். எங்கே அனுப்புவது? ஏனெனில், மியன்மார் அரசு இதற்கு முன் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தது. ஆனால் இப்போது, மியன்மாருடன் நமக்குள்ள நல்லுறவு காரணமாக மலேசியாவிலிருந்து 5,000 பேரை மீண்டும் அழைத்துச் செல்ல அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்,” எனப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் பலனாக பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள 300,000 ரோஹிங்கியாக்களையும் மியன்மார் அரசு திரும்பப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.






















