மருந்து விலைப் பட்டியலை காட்சிப்படுத்தும் உத்தரவு குறித்து தெளிவான விளக்கம் தேவை; MMA

மருந்து விலைப் பட்டியலை காட்சிப்படுத்தும் உத்தரவு தொடர்பாக நாடு தழுவிய அமலாக்க அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குமாறு சுகாதார அமைச்சகத்தையும், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தையும் மலேசிய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. பல மாநிலங்களில் உள்ள பொது மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவமனைகளுக்கு அமலாக்க அதிகாரிகள் சென்று மருந்து விலைப்பட்டியல்களைக் கோருவதாக சங்கத்திற்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆர். திருநாவுக்கரசு கூறினார்.

மருத்துவர் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட நீதித்துறை மறுஆய்வு மனுக்கள் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை, விலைக்கட்டுப்பாடு மற்றும் லாபத்தடுப்பு (மருந்துகளுக்கு விலை குறித்தல்) உத்தரவு 2025-ஐ அமல்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தபோதிலும் இது நிகழ்ந்துள்ளது. இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக அரசாங்கம் மேல்முறையீடு செய்யவில்லை என்றும், இதன் பொருள் அது நடைமுறையில் உள்ளது என்றும், நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் போது, ​​இந்த உத்தரவை மீறும் தனியார் மருத்துவர்களுக்கு எதிராக எந்தவிதமான அபராதம், வழக்குத் தொடருதல் அல்லது பிற அமலாக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

(இந்தத் தடை உத்தரவு) மற்ற சட்டங்களின் கீழ் அதிகாரிகள் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளைச் செய்வதைத் தடுக்காது, என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார். இருப்பினும், மருந்து விலைக் காட்சி உத்தரவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமல்படுத்துவதற்கு ஆய்வுகளைப் பயன்படுத்தக் கூடாது. மாநில அளவில் நிலவும் மாறுபட்ட விளக்கங்களால் தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவர்கள் குழப்பத்திற்கோ அல்லது பதட்டத்திற்கோ உள்ளாக்கப்படக் கூடாது என்று திருநாவுகரசு கூறினார். சட்டப்பூர்வமான ஆய்வுகளுக்கு ஒத்துழைக்குமாறும், ஆனால் மருந்து விலைக் காட்சி உத்தரவு தொடர்பாக அச்சுறுத்தப்பட்ட எந்தவொரு சமரச நடவடிக்கை அல்லது அமலாக்க நடவடிக்கையையும் ஆவணப்படுத்தி எம்.எம்.ஏ-விடம் (MMA) தெரிவிக்குமாறும் அவர் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here