இன்றைய மாணவர்கள் அடுத்த தலைவர்கள் என்றாலும் அவர்களின் திறமையை வெளிகொணரும் மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் இருப்பதாக டிஜிட்டல் அமைச்சரும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இன்று எப்பிங்காம் தமிழ்ப்பள்ளியின் 43ஆவது விளையாட்டு விழாவினை தொடக்கி வைத்து உரையாற்றிய கோபிந்த் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருவதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாகத் தெரிவித்தார். இப்பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்காக 10,000 ரிங்கிட் நன்கொடை வழங்குவதாகத் தெரிவித்தார்.

நான் மாணவராக இருந்த காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் வளர்ச்சி இந்தளவிற்கு இருந்ததில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் வளர்ச்சி அளப்பரியது. குறிப்பாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. அதனால் காலத்திற்கேற்ப நாம் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நாம் நம்மை மாற்றி கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.










