சுங்கை பட்டாணி:
கெடாவில் உள்ள சுங்கை மெர்போக் பாயா பகாவு காட்டில் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பினாங்கு நுகர்வோர் சங்கம் (CAP) கடும் கவலை தெரிவித்துள்ளது.
கம்போங் செகந்தாங் காராம் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள் அதிகளவில் வீசப்பட்டுள்ளன. பலமுறை புகார் அளித்தும் கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை நீடித்து வருகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் சதுப்புநிலக் காடுகள் மற்றும் ஆற்றுச் சூழலியலைச் சீரழிப்பதுடன், கடலிலும் கலந்து அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று, CAP தலைவர் மொகிதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
மேலும் இந்த நாசவேலையை செய்வபர்கள் யாராக இருந்தாலும் சுங்கை பட்டாணி நகராண்மைக் கழகமும் (MPSPK) கெடா மாநில வனத்துறையும் உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
போதுமான குப்பைத் தொட்டிகளை அமைத்தல், எச்சரிக்கைப் பலகைகளைப் பொருத்துதல் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அபாயங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள அரசாங்கம் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
























