கோலாலம்பூர்:
கடினமான, அழுக்கான மற்றும் அபாயகரமான ‘3D’ (Dirty, Dangerous and Difficult) தொழில் துறையில் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளபோதிலும், ‘MyFutureJobs’ இணையத்தளம் வாயிலாக இதுவரை 352 மலேசியர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் உள்ள மெனாரா பெர்க்காசோவில் நடைபெற்ற மனிதவள அமைச்சின் மாதாந்திரக் கூட்டம் மற்றும் சுதந்திர தின மாதக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 3D வேலை வாய்ப்புகளில் எப்போதும் மலேசியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனினும், நிலவும் வேலை வாய்ப்புகளுக்கும் அதில் சேர முன்வரும் மலேசியர்களின் எண்ணிக்கைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது என்றார்.
‘MyFutureJobs’ போர்ட்டலில் வேலைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு, மலேசியர்கள் யாரும் விண்ணப்பிக்க முன்வராத பட்சத்தில் மட்டுமே, அவ்வாய்ப்புகள் வெளிநாட்டு ஊழியர்கள், அகதிகள் அல்லது பிறருக்குத் திறந்துவிடப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.






















