மக்களின் கவலைகளுக்குத் தீர்வு தரும் புதிய திட்டங்கள்! – தேசிய தின உரையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிக்க வாய்ப்பு!

கோலாலம்பூர்:

நாட்டின் 2026-ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மலேசியப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) உரையாற்றவுள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய தின உரையின் போது, மலேசிய மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்வாதாரக் கவலைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல முக்கியப் புதிய திட்டங்களைப் பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் அமைதியையும் இறையாண்மையையும் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், அனைவரும் இன மற்றும் மத வெறுப்புணர்வுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தேசப்பற்றையும் தேசிய ஒற்றுமை உணர்வையும் நெஞ்சில் ஏந்தி இந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டங்களைச் சிறப்பாகக் கொண்டாடுமாறு அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரதமரின் இந்தச் சிறப்புரை நாளை பிற்பகல் 3.00 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிகழ்வு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள், வானொலி மற்றும் செய்தி இணையதளங்கள் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பப்படும்.

மேலும், பொதுமக்களின் வசதிக்காக Facebook உள்ளிட்ட அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலமாகவும் இந்த உரை நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here