ரவாங் தமிழ்ப்பள்ளி தொடர்பில் கடந்த சில வாரங்களாக எழுந்து வரும் பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது என்று கல்வித்துறை துணை அமைச்சரும் தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான வோங் கா வோவ் தெரிவித்தார். எங்கள் அமைச்சகம் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகியோரின் கருத்துகளை முழுமையாக கேட்டறிந்ததாக வோங் தெரிவித்தார். பள்ளியின் இணைக்கட்டடம் (IBS) தற்பொழுதைய இடத்தில் நிலை இரட்டை மாடி கட்டடத்தில் 6 அறைகள் நிலை நிறுத்தப்படும் என்று அதன் தொடர்பில் இன்று நடந்த கலந்துரையாடல் வழி தீர்வு எட்டப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும் பள்ளியின் வேண்டுகோளுக்கு இணங்க பள்ளியின் பழைய கட்டடத்தின் மறு சீரமைப்பு 13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் கட்டித்தரப்படும் என்றும் வோங் கூறினார். தற்பொழுது அரசாங்கம் அனுமதி வழங்கிய இடத்தில்தான் இணைக்கட்டடம் எழுப்ப முடியும் என்பதனையும் இவ்வேளையில் தெளிவுப்படுத்த விரும்புவதாகவும் கூறினார். பெற்றோரில் சிலர் கழிப்பறை, சிற்றுண்டி சாலை ஆகிய சில பிரச்சினைகளை முன் வைத்தனர். அவர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த அடுத்தாண்டு தொடங்கி 6 வயது மாணவர்கள் முதலாம் ஆண்டில் இணையலாம் என்று பிரதமர் அறிவித்தைத் தொடர்ந்து தற்போது 936 மாணவர்கள் பயிலும் ரவாங் தமிழ்ப்பள்ளியில் அடுத்தாண்டு முதலாம் ஆண்டில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையவிருக்கின்றனர். பொதுவாக இந்த எண்ணிக்கை ஆண்டுத்தோறும் 100க்கும் குறைவாகவே இருக்கும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

இந்த இணைக்கட்டடத்திற்காக அரசாங்கம் 1.5 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கட்டடம் வேண்டாம் என்றால் அந்த நிதி வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நாங்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் இல்லாத கட்டத்தில் இணைக்கட்டடம் கட்டி தருமாறு கேட்டிருந்தோம்.
அது 13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் கட்டி தரப்படும் என்று கூறியிருக்கின்றனர். தற்பொழுது இணைக்கட்டடம் எழுப்பபடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் விளையாட்டு திடலின் இடம் கட்டத்திற்கு எடுத்து கொள்ளப்படுவதுதான் பெற்றோருக்கும் வருத்தத்தை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.









