14 ஆண்டுகால அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி! – டிஏபி கட்சியிலிருந்து விலகினார் முன்னாள் துணையமைச்சர் ஓங் கியான் மிங்!

கோலாலம்பூர்:

முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை துணையமைச்சருமான டாக்டர் ஓங் கியான் மிங், ஜனநாயகச் செயல் கட்சியில் (DAP) இருந்து தாம் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோணி லோக்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமது ராஜினாமா இன்று (ஆகஸ்ட் 31) முதல் அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் தீவிர அரசியலில் தொடர்ந்து செயல்படப்போவதில்லை என்றும், வரும் 16-ஆவது பொதுத் தேர்தலில் (GE16) போட்டியிடும் எண்ணமோ அல்லது உடனடி அடிப்படையில் வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் திட்டமோ தமக்கு இல்லை என்றும் ஓங் கியான் மிங் தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் வரும் GE16 பொதுத்தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு கட்சியில் இணைந்தது முதல் செர்டாங் (2013-2018), பாங்கி (2018-2022) நாடாளுமன்ற உறுப்பினராகவும், துணையமைச்சராகவும் சேவை செய்ய வாய்ப்பளித்த கட்சித் தலைமைக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.குறிப்பாகத் தம்மைச் சேர்த்துக் கொண்ட முன்னாள் எம்பி டோனி புவா (Tony Pua) மற்றும் வாய்ப்பளித்த முன்னாள் பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருக்கு அவர் சிறப்பு நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ‘Are We OK’ வலைத்தள ஒலிபரப்பு, ஆலோசனைப் பணிகள் மற்றும் பொது நலன் சார்ந்த அமைப்புகள் மூலமாக நாட்டுக்குத் தொடர்ந்து சேவை செய்யவுள்ளதாகக் கூறி, நாட்டு மக்களுக்குத் தமது சுதந்திர தின வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here