கோலாலம்பூர் –
தலைநகரின் ஜாலான் சைட் புத்ராவில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி, பின்னால்வந்த மோட்டார் சைக்கிளோட்டிக்கு விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், கார் ஓட்டுநருக்கு இரண்டு நாள் சிறைத் தண்டனையும் RM6,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்ட 26 வயதான லிம் சிங் ஹாங், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இன்று முதல் அவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி ஃபாடின் தயானா ஜலீல் உத்தரவிட்டார்.
மேலும் குற்றவாளி பராதம் செலுத்தத் தவறினால், மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், குற்றத்தின் விவரங்களை அவரது ஓட்டுநர் உரிமத்தில் பதிவு செய்ய உத்தரவிட்டதுடன் அவரது உரிமத்தை ஐந்து ஆண்டுகளுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 9.19 மணியளவில், ஜாலான் சைட் புத்ராவில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி மற்ற சாலைப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக லிம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவாளி ஓட்டிச் சென்ற கார் திடீரென பாதையை மாற்றி, அதன் பிரேக்கை திடீரென அமுக்குவது மற்றும், இதனால், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து காரின் பின்புறத்தில் மோதி கீழே விழுந்ததில் அவரது கன்னம், முழங்கால் மற்றும் வலது கால் விரல்களில் காயம் ஏற்பட்டது போன்ற 24 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.









