நமீதாவுக்கு ஏற்பட்ட அவமானம் ; அனுமதி மறுத்த போலீசார்!

இந்தியப் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பாஜக நட்சத்திர பேச்சாளர் நமீதாவை போலீசார் விவிஐபி கேட் வழியாக அனுமதிக்க மறுத்து அலைக்கழித்ததால், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வந்த நடிகை நமீதா, கடந்த 2019ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக மாநில பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற் பதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பே நமீதா நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். பின்னர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அவர் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மத்திய இணை அமைச்சரும் நீலகிரி வேட்பாளருமான எ.முருகனுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற அவரை விவிஐபி கேட் வழியாக செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் செல்லும் பொதுகேட் வழியாக உள்ளே செல்ல நமீதா சென்றார். ஆனால் அங்கிருந்த போலீஸார் அவரை விவிஐபி கேட் வழியாக செல்லுமாறு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நமீதா மீண்டும் விவிஐபிகேட் பகுதிக்கு வந்தார். ஆனால் அப்போதும் அவரை உள்ளே அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். அடுத்தடுத்து அலைக்கழிக்கப்பட்ட நமீதா மற்றும் அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் அங்கிருந்த போலீஸார் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் கழித்து நமீதாவை விவிஐபி கேட் வழியாக அரங்கத்திற்குள் செல்ல போலீஸார் அனுமதித்தனர்.

இதனிடையே, போலீஸாரால் அலைக் கழிக்கப்பட்டு சாலையில் நடந்து சென்ற நமீதாவை அப்பகுதியில் இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here