காசா மீதான போரை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையாளும் விதம் தவறாக இருக்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ அளித்த பேட்டியில், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் அமைப்பின் வாகனம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது மூர்க்கத்தனமானது என கண்டித்துள்ளார்.
காசா மீதான போரை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என தாம் அழைப்பு விடுப்பதாகவும் இஸ்ரேல் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். காசா பகுதிக்குள் 6 முதல் 8 வாரங்கள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கூறிய அதிபர் ஜோ பைடன், நிவாரண பொருட்கள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் தடுக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.
காசா பகுதியை நிர்வகித்து வந்த ஹமாஸ் ஆயுதக் குழு, கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்து பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஆயிரத்து 139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 240 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் குழுவினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் குழுவினர் மீது ராணுவ தாக்குதலை முன்னெடுத்து வரும் இஸ்ரேல், காசா பகுதியில் பெரும்பாலான இடங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.