எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை- 11,000 பேர் வெளியேற்றம்; தொடர் பதற்றத்தில் இந்தோனேசியா

    இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு பலமுறை நிகழ்ந்ததை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் வசிக்கும் 11,000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இந்தோனேசியாவில் புதன்கிழமை ருவாங் மலை எரிமலை வெடித்து சிதறியதில், வானில் ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு எரிமலைக் குழம்புகளை உமிழ்ந்தது. மேலும் பல கிமீ பரப்புக்குக்கு சாம்பல் பரவியது. தொடர்ந்து அங்கே சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக 11,000-க்கும் அதிகமான மக்கள் ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலையில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது ஐந்து பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதாக, இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து எரிமலை வெடிப்பு சார்ந்த எச்சரிக்கையை அதற்கான உச்ச நிலைக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

    வடக்கு சுலவேசி மாகாணத்தில் ருவாங் மலை அமைந்துள்ளது. இது இந்தோனேசியாவின் உயிருடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்று. இதன் முதல் வெடிப்பு செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி இரவு 9:45 மணிக்கு அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் புதன்கிழமை அன்று அடுத்தடுத்து நான்கு முறை வெடித்தது.

    2,378 அடி ருவாங் எரிமலையிலிருந்து குறைந்தது 6 கிலோமீட்டர் தொலைவில் விலகியிருக்குமாறு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ருவாங்கின் இடைவிடாத வெடிப்புகள் அதிகரித்ததன் காரணமாக இந்தோனேசியாவின் விமான நிலையத்தையும் மூடியுள்ளனர்.

    டெக்டோனிக் தகடுகளில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்திய 2 நிலநடுக்கங்களால் தற்போது, ருவாங்கில் எரிமலை செயல்பாடு அதிகரித்ததாக அந்த நிறுவனம் மேலும் கூறியது. எரிமலை வெடிப்புகள் மேலும் எதிர்பார்க்கப்படுவதால், அங்கிருந்து சுமார் 4 கிமீ சுற்றளவுக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

    27 கோடி மக்கள் வசிக்கும் இந்தோனேசியாவில் 120 செயல்படும் எரிமலைகள் உள்ளன. எரிமலை வெடிப்பு தாக்கம் காரணமாக இறப்பு அல்லது காயம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here