ஜோகூர் பாரு:
நேற்றிரவு இங்குள்ள பங்குனான் சுல்தான் இஸ்கண்டார் (BSI) சோதனைச்சாவடியில் BMW கார் தீப்பிடித்ததில், சிங்கப்பூரர்கள் இருவர் கவலையான தருணத்தை எதிர்கொண்டனர்.
இந்தச் சம்பவம், இரவு 8.15 மணியளவில், சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான கார் வழித்தடமான கவுண்டர் 9 அருகே கார் பற்றி எரிந்ததாகவும், உடனே அங்கிருந்த காவல்துறை, மலேசிய தன்னார்வத் துறை (RELA), துணைப் போலீசார் மற்றும் மலேசியக் குடிநுழைவுத் துறையினர் இணைந்து தீயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர் என்று, தென் ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.
தீப்பற்றி எரிந்த காரின் 31 வயது ஓட்டுநரும் அதில் பயணம் செய்த 32 வயது பயணியும் காயமின்றி தப்பியதாகவும், இந்த தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கார் தீப்பிடித்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது என்றும், காரின் இயந்திரம் தீப்பிடித்திருக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இந்த தீச்சம்பவம் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பு பின்னர் திப்பிடப்படும் என்றும் அவர் சொன்னார்.
தீ, காரின் மற்ற பாகங்களுக்கு மிக விரைவாகப் பரவியதாகவும் வாகனத்தின் 60 விழுக்காடு சேதமடைந்ததாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.


















