பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாட்டின் கவர்னர் ஜெனரல் ஆகியோரின் இல்லமான ஒட்டாவா தோட்டத்தின் மைதானத்திற்குள் நுழைந்த நாட்டின் இராணுவத்தின் ஆயுதமேந்திய உறுப்பினரை கனடிய போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
காலை 6:30 மணியளவில் (1030 GMT) சந்தேகநபர் தனது வாகனத்துடன் ரைடோ ஹாலுக்கு பிரதான பாதசாரி நுழைவாயிலைக் கடந்தார் என்று அரச கனடிய மவுண்டட் போலீஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரோந்துப் பணியில் இருந்த ஆர்.சி.எம்.பி அதிகாரிகளால் அவர் விரைவாக மடக்கப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
ஆர்.சி.எம்.பி.போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்நபர் கனடிய ஆயுதப்படையில் உறுப்பினராக உள்ளவர் என்று போலீசார் கூறினர்.
ரைடோ ஹால் என்பது கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட்டின் உத்தியோகப்பூர்வ இல்லமாகும். ட்ரூடோவும் அவரது குடும்பத்தினரும் ரைடோ கோட்டேஜில் வசிக்கின்றனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் பிரதமரும் அவரது குடும்பத்தினரும், கவர்னர் ஜெனரலும் அந்த இடத்தில் இல்லை என்று ஆர்.சி.எம்.பி. கூறியது.
தோட்டத்திற்கு செல்லும் கேட் சேதமடைந்திருக்கிறது.
காமன்வெல்த் உறுப்பினராக இருப்பதால் கனடாவின் முறையான அரச தலைவரான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உத்தியோகப்பூர்வ பிரதிநிதியாகவும் ஜூலி பேயட் இருக்கிறார்.










