முன்னறிவிப்பின்றி 5 விமானங்கள் ரத்து; சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் புறப்பட வேண்டிய 2 விமானங்கள், வரவேண்டிய 3 விமானங்கள் என 5 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 6 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானங்கள், புணேயில் இருந்து அதிகாலை 4.25 மணி, தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 1.45 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் விமானங்கள் முன் அறிவிப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் ஏதுவும் செய்யப்படாத நிலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வணிக மற்றும் தனிப்பட்ட பயணங்களைத் திட்டமிட்டிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

மேலும், நிர்வாக காரணங்களால் 5 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாதிப்புக்குள்ளான பயணிகள் பணத் தொகையை திரும்பப் பெறுதல், மறு முன்பதிவு மற்றும் விளக்கங்கள் கேட்டு விமான நிலைய கவுண்டர்களில் நீண்ட வரிசைகள் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க, விமான நிலையம் வருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமானத்தின் நேரத்தை உறுதி செய்துகொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here