8 சிறுமிகள், சீரியல் ரேபிஸ்ட்… குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

ஆக்ரா,உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் பாக்னா கிராமத்தில் வசித்து வந்தவர் மனு (வயது 55). குப்பை பொறுக்கும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 28-ந் தேதி 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாவார்.

குப்பை பொறுக்கும் வேலைக்காக கிராமங்களின் தெருக்கள், சந்து பகுதிகளிலும், பள்ளி வழியேயும் சென்று வந்திருக்கிறார். அவரை யாரும் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. சிறுமிகளிடம் நன்றாக தெரிந்தவர் போன்று பழகி வந்த அவர், இனிப்புகள் அல்லது பரிசுகள் என கொடுத்து அவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

இதன்பின்னர், பலாத்காரத்திற்கு கவர்ந்து இழுத்து செல்லும் வழக்கம் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது என விசாரணை அதிகாரி கூறுகிறார். சிறுமிகளின் பலாத்கார விவகாரத்தில் சைக்கோவாகவும் செயல்பட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கழுத்து நெரித்து கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி, மெயின்புரி பகுதியை சேர்ந்தவரான மனு என கண்டறியப்பட்டார். கிராமவாசிகள் அவரை அடையாளம் காட்டினர். இதனால், போலீசார் அவரை தேட தொடங்கினர். அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு என போலீசார் அறிவித்தனர்.

இந்நிலையில், அவரை கைது செய்வதற்காக நேற்று காலை போலீசார் சுற்றி வளைத்தபோது மனு போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதனையடுத்து போலீசார் திருப்பி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த என்கவுன்ட்டர் மோதலில் மனு மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் பலியானார்.

துப்பாக்கி சண்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோரும் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்து கைத்துப்பாக்கி, வெடிபொருள், வங்கி கணக்கு புத்தகம், ஏடி.எம். கார்டு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கு தவிர்த்து பல்வேறு பாலியல் பலாத்கார வழக்குகளில் மனுவுக்கு உள்ள தொடர்பு பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 9 முதல் 15 வயதுக்குட்பட்ட 8 சிறுமிகள் மனுவால் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், ஜூன் 3-ந்தேதி உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமி பின்பு காணாமல் போன நிலையில், சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்தே அவரை பிடிக்க நடந்த முயற்சியில் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்ற மனு, என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here