மாட்சிமை தங்கிய மாமன்னர் பற்றி ஓர் அவதூறு பதிவை பதிவேற்றம் செய்த ஓர் குடும்ப மாது போலீஸ் விரைந்த எடுத்த நடவடிக்கையானது நாட்டின் சட்டத்தோடு விளையாடக் கூடாது என்பதை உரக்கச் சொல்லி இருக்கிறது என்று மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியத்தின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் கூறினார்.
அந்தப் பெண்ணை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றம்சாட்டியது அவதூறு, இழிவு படுத்தப்படுவதில் இருந்து மாட்சிமை தங்கிய பேரரசரை காப்பதில் அமலாக்கப் பிரிவினருக்கு உள்ள கடப்பாட்டையும் உறுதியையும் காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
பேச்சு சுதந்திரம் என்பது நாட்டின் முடியாட்சி மீது வெறுப்புணர்வை விதைப்பதற்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் இல்லை என்பதை நாட்டின் சட்ட கொள்கைகள் நிரூபித்திருக்கின்றன என்று மலேசிய குற்றத் தடுப்பு வாரியத்தின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ புலவேந்திரன் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை மக்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாட்டின் முடியாட்சியின் சின்னமாக பேரரசர் திகழ்கிறார். அவருக்கு தலை வணங்க வேண்டும். அவரின் பிரஜைகள் என்ற மதிப்பும் மரியாதையும் நீடித்து நிலைப்பெற்றிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களில் வரம்பு மீறக் கூடாது. ஒவ்வொரு செயலுக்கும் சட்ட சிக்கல் இருக்கும் என்பதை பயனர்கள் உணர வேண்டும்.
அரசாங்கம் வழங்கும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வெறுப்புணர்வை விதைத்து அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ், மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (MCMC) அறிவித்திருப்பதை டத்தோஸ்ரீ புலவேந்திரன் வரவேற்றார்.
நாட்டின் சுபிட்சத்தை அசைத்துப் பார்க்கும் எந்த ஒரு முயற்சியையும் போலீஸ், எம்சிஎம்சி வேடிக்கை பார்க்காது என்பது திட்டவட்டமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த எச்சரிக்கையானது சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் நமக்கும் ஒரு கூட்டுப் பொறுப்புணர்வு உள்ளது என்பதை பயனர்களும் பொது மக்களும் உணர வேண்டும். தேசப் பற்றின் மாண்புகளோடு டிஜிட்டல் களம் அனைவருக்கும் பாதுகாப்பானது என்பதை நாம் உறுதி செய்வோம் என்று டத்தோஸ்ரீ புலவேந்திரன் வலியுறுத்தினார்.




















