கூலாய்,
கூலாய், கோத்தா திங்கி சாலையின் 4ஆம் கிலோமீட்டர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில், 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் சிலர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 1.05 மணியளவில், 26 வயது பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா பெஸ்ஸா கார் திடீரென சாலையை கடந்த மாட்டுடன் மோதி விபத்து ஏற்பட்டது என கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் டான் செங் லீ தெரிவித்துள்ளார்.
அந்த மோதல் காரணமாக, கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற வழித்தடத்திற்குள் சென்று, 19 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற யமஹா 135LC மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஹினோ லோரி மீது மோதியது.
மேலும் மூன்று யமஹா 135LC மோட்டார் சைக்கிள்கள் லோரியின் பக்கமும் பின்புறமும் மோதி விபத்தில் சிக்கின. இதனால் பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.
எனினும், கடுமையான காயங்களுக்கு ஆளான 19 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது என டான் செங் லீ தெரிவித்துள்ளார்.





















