ஆராய்ச்சிக்கு உதவிய அமீரக பாலைவனங்கள்: ‘செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது உறுதி’ – தமிழக ஆராய்ச்சியாளர் பேட்டி

அபுதாபி,செவ்வாய் கிரகத்தை போன்ற பண்புகளை உடைய அமீரக பாலைவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் நீண்ட நாட்கள் தண்ணீர் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி தினத்தந்தி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவரில் இருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி அந்த கிரகத்தில் உள்ள கேல் என்ற பள்ளத்தாக்குக்கும் அமீரக பாலைவன பகுதியின் நிலப்பரப்புக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் ஆராயப்பட்டன. இதில் அமீரக பாலைவன தளங்குக்கு இடையே பலத்த காற்றினால் வீசப்பட்ட மணல் பாறைகள் உருவாக்கப்பட்டது. இது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானது. இந்த நிலப்பரப்பு கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆராயும் கேல் பகுதியில் உள்ள நிலப்பரப்பை ஒத்துள்ளது.

மேலும் அங்குள்ள பாறைகளும், லிவா, ஹத்தா, அல் வத்பா ஆகிய அமீரக சிவப்பு நிற பாலைவன பகுதிகளில் உள்ள பாறைகளும் ஒரே மாதிரியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள பாறைகள் பல நூறு கோடி ஆண்டுகள் தண்ணீருடன் தொடர்பில் இருந்து பிறகு வறண்ட காலகட்டத்தில் பாறைகளாக மாறி உள்ளது என ஏற்கனவே ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. மேலும் அங்கு ஜிப்சம் என்ற தாது பூமியில் உள்ளது போலவே படிமங்களாக இருப்பது இந்த ஆராய்ச்சிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

இதில் கரிம படிமங்கள் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. செவ்வாய் கிரகம் வெறுமனே ஈர நிலையில் இருந்து வறண்ட நிலைக்கு செல்லவில்லை என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. அதன் ஏரிகள், ஆறுகள் மறைந்த பிறகும் சிறிய அளவிலான நீர்நிலைகள் தொடர்ந்து நிலத்தடியில் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அமீரக பாலைவனத்தின் குறிப்பிட்ட நிலப்பரப்பு செவ்வாய் கிரக நிலப்பரப்புடன் ஒத்து இருப்பதால் நீர் நிரம்பிய பகுதிகளுடன் இதே போன்ற உயிர்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாக செவ்வாய் கிரகம் இருந்திருக்க வேண்டும். நுண்ணுயிரிகள் அங்கு வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது குறித்த ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அந்த ஆராய்ச்சியின் முதன்மை நிபுணர் டாக்டர் டிமித்ரா கூறும்போது, ‘‘இந்த ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் நிலப்பரப்புகளை போலவே அமீரகத்தில் உள்ள பாலைவனங்களை காணமுடிந்தது. செவ்வாய் கிரகத்தில் இருப்பதுபோன்ற உணர்வு கனவு நனவானதை போல உள்ளது’’ என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here