மெர்சிங்:
மெர்சிங் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மதிய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 பேராக இருந்த நிலையில், மாலை 4 மணி அளவில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேராக உயர்ந்துள்ளது.
ஜோகூர் மாநிலச் செயலாளர் டத்தோ அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை 5 மணி மற்றும் 11 மணி அளவில் திறக்கப்பட்ட இரண்டு தற்காலிக நிவாரண மையங்களுக்கு (PPS) மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
தற்போது வெள்ள பாதிப்பு பெரும்பாலும் கம்போங் ஹுபோங் (Kampung Hubong) மற்றும் கம்போங் பாரு ஏர் தாவார் (Kampung Baru Air Tawar) ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
இங்கு கம்போங் பாரு ஏர் தாவார் மற்றும் கம்போங் ஹுபோங் பகுதிகளைச் சேர்ந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேர் SK Pusat Air Tawar நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.
அதேநேரம் கம்போங் பாரு ஆயிர் தாவார் பகுதியைச் சேர்ந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 111 பேர் SK (C) Chiao Ching நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி , ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை வரை நீடிக்கக்கூடிய ‘அபாயக் கட்ட’ (Danger Level) தொடர் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















