பாசிர் சாலாக்,
சமூக மேம்பாட்டு துறை (KEMAS) ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப் பணிகளில் அமர்த்தும் பரிந்துரை, 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படலாம் என்று துணைப் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த பரிந்துரை விவாத நிலையில் இருப்பதாகவும், அது நடைமுறைக்கு வந்தால் கூடுதல் செலவுகள் ஏற்படாது என்றும் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான சாஹிட் கூறினார்.
“இந்தப் பதவி நிலைநிறுத்தப்பட்டால், புதிய நியமனங்கள் அல்லது கூடுதல் அதிகரிப்புகள் எதுவும் இருக்காது. மேலும், ஓய்வூதியம் இல்லாமல் நிரந்தர வேலை வாய்ப்பாக மாறும் பிற ஒப்பந்தப் பணிகளுக்கும் இது ஒரு அளவுகோலாக அமையும்,” என்றார் அவர்.
இன்று பேராக் மாநிலம் பண்டார் பாரு பெல்கிரா மண்டபத்தில் நடைபெற்ற ‘கெமாஸ் கிராமப்புற நன்கொடைத் திட்டம்’ மாநில அளவிலான தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் டாக்டர் சாஹிட் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள சுமார் 15,600 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் பணிகளில் அமர்த்தும் பரிந்துரை, பொதுச் சேவைத் துறை (JPA)க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.




















