முன்னாள் மனைவி மற்றும் 7 வயது மகளைத் தாக்கிய நபர் – போலீஸ் விசாரணை தீவிரம்!

கோம்பாக்:

சிலாங்கூர், குண்டாங் ஜெயாவில் உள்ள தாமான் சயின்டெக்ஸ் (Taman Scientex) பகுதியில், தனது முன்னாள் மனைவி மீது ஆக்ரோஷமாகத் தாக்குதல் நடத்திய 34 வயது நபர் குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.47 மணியளவில் நிகழ்ந்ததாக கோம்பாக் மாவட்டத் துணை போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் அபாங் காடெரி அபாங் வாஸ்லி தெரிவித்தார்.

சந்தேக நபர் தனது குழந்தையை முன்னாள் மனைவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, அவர்களுக்குள் பராமரிப்புச் செலவு (Maintenance issues) தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த அந்த நபர், முன்னாள் மனைவியைத் தாக்கியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.

மேலும், அந்த நபர் தனது 7 வயது மகளையும் பிடித்துத் தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் போது அந்த நபர் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் 15 வினாடி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் இது குறித்துப் புகார் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, தண்டனைச் சட்டம் பிரிவு 323: தானாக முன்வந்து காயம் விளைவித்தல், குடும்ப வன்முறைச் சட்டம் 1994, பிரிவு 18A: குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறை, ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்:

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி சர்ஜென்ட் முஹமட் அமிருல் (016-6740989) அல்லது கோம்பாக் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தை (03-6126 2222) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here