மலேசியா வளர்ந்த நாடுகளின் குப்பைகளைக் கொட்டும் இடமல்ல; 148 மின்னணுக் கழிவு கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன

கோலாலம்பூர்:

மலேசியாவை உலகின் “குப்பைத் தொட்டியாக” மாற்ற அனுமதிக்க முடியாது என்ற உறுதியான முடிவில், போர்ட் கிள்ளானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 148 மின்னணுக் கழிவு கொள்கலன்களை அவற்றின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

சுற்றுச்சூழல் துறை (DoE) இந்தக் கொள்கலன்களுக்கான முறையான நோட்டீஸ்களைத் தயாரித்து, அமலாக்கத்திற்காக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்திடம் (MCBA) ஒப்படைத்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகளுக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள், அந்தக் கழிவுகளை அவை வந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிப்ரவரி 4, 2026 முதல் மலேசியாவில் மின்னணுக் கழிவு இறக்குமதிக்கு “முழுமையான தடை” (Absolute Prohibition) விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த சில விதிவிலக்குகள் தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மின்னணுக் கழிவுகளில் ஈயம், பாதரசம் மற்றும் காட்மியம் போன்ற நச்சுத்தன்மையுள்ள உலோகங்கள் உள்ளன. இவை முறையாகச் சுத்திகரிக்கப்படாவிட்டால் மண் மற்றும் நிலத்தடி நீரைச் சீரழிக்கும்.

இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் துறையின் உயர் அதிகாரிகள் சிலர் ஊழல் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, அரசாங்கம் இப்போது மிகக் கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

“மலேசியா வளர்ந்த நாடுகளின் குப்பைகளைக் கொட்டும் இடமல்ல” என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தும் விதமாக இந்தத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here