எல்லை தாண்டும் மலேசியத் தொழிலாளர்களுக்குக் கவசமாகும் பெர்கேசோ: ‘பயணிகள் திட்டம்’ குறித்து சிங்கப்பூரில் அதிரடி ஆலோசனைக் கூட்டம்!

வேலைக்காகத் தினமும் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான மலேசியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பயணிகள் திட்டத்தை’ (Skim Pengembara) நடைமுறைப்படுத்துவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் சமூகப் பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோ (PERKESO) தீவிரம் காட்டி வருகிறது. வரும் இரண்டாவது காலாண்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ள இத்திட்டம் குறித்து, சிங்கப்பூரில் உள்ள முக்கியப் பங்குதாரர்களுடன் பெர்கேசோ இன்று உயர்மட்ட ஆலோசனைகளை நடத்தியது.

ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையே தினமும் பயணம் செய்யும் 4,00,000-க்கும் அதிகமான மலேசியப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு வளையம் இல்லாத நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும். இக்கூட்டத்தில் பேசிய பெர்கேசோ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ் முகமது, நடைமுறையில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைச் சாடினார்.

எல்லை தாண்டிய பயணங்களின் போது ஏற்படும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தற்போதைய பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாகக் கருத்தில் கொள்ளவில்லை என்றும், இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் சொல்லொணா நிதி நெருக்கடிக்குத் தள்ளப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். சிங்கப்பூர் விபத்து உதவி மையத்தின் (SAHC) அதிர வைக்கும் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் மட்டும் வேலைக்காகப் பயணம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சூழலை மாற்றியமைக்க, மேலிருந்து கீழ் என்றில்லாமல், தொழிலாளர்களின் உண்மை நிலையை உணர்ந்து ‘கீழ்மட்டத்திலிருந்து மேல்நோக்கிய’ (bottom-up approach) அணுகுமுறையை பெர்கேசோ கையில் எடுத்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் டத்தோ டாக்டர் அஸ்ஃபார் முகமது முஸ்தபா முன்னிலையில் நடைபெற்ற இந்த அமர்வில், 1 Third Media Movement மற்றும் சிங்கப்பூர் மலேசிய சங்கம் (MASIS) உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுத் தங்களது ஆலோசனைகளை வழங்கினர். மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இத்திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தயாராகி வரும் நிலையில், இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் எல்லை தாண்டிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு வலுவான பாதுகாப்பு அரணாக அமையும் என்பதில் ஐயமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here