சுங்கை பட்டாணியில் 5 நாட்களாகத் தேடப்பட்டு வந்த முதியவர் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி:

தீக்காம் பத்து, கம்போங் மஸ்ஜிட் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 83 வயது முதியவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

முகமட் காலிட் (Mohd Khalid @ Halim Salleh) என்ற அந்த முதியவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகே உள்ள வடிகாலில் விழுந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. இதனையொட்டி ஞாயிறு காலை முதல் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் (SAR) நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இன்று கம்போங் பாடாங் பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டின் அருகே அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் திசைமாறி அலைந்து திரிந்ததால் உயிரிழந்திருக்கலாம் என தீக்காம் பத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஏஎஸ்பி ஃபௌசி ஷுவைப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் மகள் ரோஸ்மாவதி (51) கூறுகையில், தனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தனியாக வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டார். “அவரது உடல் கிடைத்துவிட்டது என்பதே எங்களுக்கு ஒரு ஆறுதல்,” என அவர் மனவேதனையுடன் தெரிவித்தார்.

மே 2-ஆம் தேதி இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டது. முதியவரின் உடல் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here